புதன், 16 ஜூலை, 2014

கட்டியம் -கரவை தாசன்-

("ஏகலைவன்" தென்மோடி கூத்துப் பிரதிக்காக கவிஞர் கரவை தாசன் வழங்கியுள்ள கட்டியம்!) 



தமிழ்ச் சூழலில் ஆவணப் படுத்துதல் என்பது அருகியே வந்திருக்கின்றது. ஆயினும் கூத்துப் பற்றி தமிழ்நாட்டில் 11ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றினை நாடகமாக மேடையேற்றம் செய்ததாக கல்வெட்டுக்கள் உள்ளன. ஆனால் 18ம் நூற்றாட்டின் கூற்றுகளிலேயே சங்கரதாஸ் சுவாமிகள் புராணக் கதைகளை நாடகப் பிரதியாக்கம் செய்தாரென்றும் 19ம் நூற்றாட்டின் கூற்றுகளில் அன்று நீதிபதியாக இருந்த காசி விஸ்வநாதன் அவர்கள் "தம்பாச்சாரி விலாசம்" "கையூடு தாசில்தார் விலாசம்" போன்ற நாடகங்களை பிரதியாக்கம் செய்தார் என்றும் காணக்கிடைக்கின்றன. இப்படியாக நாடகப் பிரதியாக்கத்திற்கு ஒரு வரலாற்றுப் போக்கிருக்கின்றது. இருப்பினும் நாடகப்பிரதிகள் தமிழில் மிகவும் ஒறுப்பாகவே இருக்கின்ற நிலையிலே, நாடகப் பிரதியினை அச்சாக்கம் செய்வதன் அவசியம் கருதி, தமயந்தியின் "ஏகலைவன்" தென் மோடிக் கூத்துப்  பிரதியினை அச்சாக்கம் செய்வதென்பது மிகவும் ஆரோக்கியமான செயல் நெறியே. 

வெள்ளி, 11 ஜூலை, 2014

மாறித் ஹிப்சன்

தமயந்தி (1988)



மணி காலை ஐந்து.

மாறித் ஹிப்சன் எழுந்து, தனது பிடரியைத் திருகும்வரை கட்டில் பீடத்திலிருந்து மணி ஐந்து என்பதைச் சொல்லிக்கொண்டேயிருந்தது அந்தஸ் சிறிய, சதுர வெள்ளை மணிக் கூடு. அது எதிர்பார்த்ததுபோலவே மூன்று சத்தத்தின்பின் மாறித் ஹிப்சன் அதன் பிடரியைத் திருகி சத்தத்தை நிறுத்தினாள்.

புதன், 9 ஜூலை, 2014

மண்டா -தமயந்தி-சிறுகதை

நன்றி: குவர்னிகா 41வது இலக்கியச்சந்திப்பு மலர் 


2012 கோடையின் ஆரம்பம். ஸ்லின்னிங்கன் முகத்துவாரம்.
மூத்தவள் அணியத்தில் இருந்தாள், இளையவள் கடையாலில், நான் வாரியில் நடுப்படகில்.

மார்ட்டீன் அண்டர்சனின் 17அடி தும்புக்கண்ணாடி வள்ளம். அதன் எவன்றூட் வெளியிணைப்பு யந்திரத்தின் ஆடுதண்டு உப்புவரில் துருப் பிடித்ததால் இயக்கம் மறுத்து விட்டது. அதனால் மார்ட்டீன் அண்டர்சன் அதனை திருத்துவோனிடம் செப்பனிடக் கொடுத்துவிட்டார். எனவே இன்று தண்டு வலித்துக்கொண்டுதான் ஸ்லின்னிங்கன் முகத்துவாரம்வரை வந்தோம். போன கோடையில்தான் மார்ட்டீன் அண்டர்சன் புதிதாக வாங்கியிருந்தார் இந்தப் படகை. சில்வர் வைகிங்க் படகு. அவரது தாத்தா அண்டர்சன் ஹாகன் தனது பரம்பரை முதிசமாகக் கொடுத்துச்சென்ற நாட்டு மரப்படகு அடிக்கடி கலப்பத்துக்குள்ளாவதால் அதனை வீட்டுக் கோடிப்புறத்திலேயே கட்டையில் ஏற்றிப் பக்குவமாய் தறப்பாளிட்டு மூடி வைத்துவிட்டார்.

கிற்ரார் பாடகன்

-தமயந்தி- (1994 ஜனவரி) 



அவனுக்குச் சொந்தமானதெல்லாம் கம்பிகள் தொய்ந்து போன ஒரு பழைய கிற்ரார், மரக்குவளை ஒன்று, அவனது உடலோடு உரசிக் கொண்டிருக்கும் மரக்கட்டைத் துண்டுகளைப் பொத்தானாய்ப் பொருத்திக் கொண்ட மண்ணிற ஒட்டுக்கள் போட்ட இத்துப் போன நீளக் குளிருடை, அதே வயதை ஒத்த ராணுவக் காற்சட்டை, மழை, வெயில், பனியின் தாக்குதல்களிலிருந்து அவனது தலையை விறைத்த வீரனைப் போல் எப்போதும் பாதுகாத்துக் கொண்டு அவனது தலை மேல் குந்தியிருக்கும் வெள்ளைக் கரடியின் தோலினாலான தொப்பி.

நகரத்தின் தோளிலிருந்து பிரியும் குறும்பாதை புனித யோவான் சாலையைச் சென்றடையும். யோவான் சாலையின் தொப்பிளிலிருந்து தொழிலாளர் தெரு பிரிகிறது. தொழிலாளர் தெருவின் தொடக்கத்தில் இருந்து அதன் இரு கரைகளையும் நிறைத்து நெருசலாய் அடுக்கப்பட்ட தொழிற்சாலைகள். தொழிலாளர் தெருவின் நெஞ்சுக்கு
அண்மையில் 'பேத்தர்' இரும்பு ஆலை. அந்த இரும்பு ஆலையின் பிடரியிற் தொடங்கி முதுகு வழியாக குதிக்கால் வரைசென்று, தொழிலாளர் குடியிருப்புக்குள் மெலிந்து செல்லும் சிறு தெரு ''கருங்கற் தெரு'' அந்தக் கருங்கற் தெருவின் முகத்தினருகே முதிர்ந்த சிவப்பு அப்பிள் மரம்.

மண்கணக்கு


 தமயந்தி (சிறுகதை 1997)


ராசதுரையப்பு புறப்பட்டுவிட்டார் என்பதை சுத்தமாய் விடியாத அந்த அதிகாலையிலும்கூட தெருமுழுவதும் அறிந்துகொண்டுவிட்டது. ராசதுரையப்புவின் காறிக் கனைக்கும் ஒலியில் விழித்துக்கொண்ட அயலட்ட நாய்களின் அன்புக் குரல்களும் ஊளையிடல்களும் அவர் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டாரென்பதற்கு கட்டியம் கூறும். இது வழமை. நீண்டகால வழமை.

ராசதுரையப்புவுக்கும் அன்னபூரணம் ஆச்சிக்கும் பிள்ளைகள் இல்லை. அந்தக்குறையைத் தீர்க்கவும் மறக்கவும் கிராமத்துப் பிள்ளைகளில் பாசத்தையும் பரிவையும் வழங்கினார். தாராளாமாகவே அள்ளி வழங்கினார்.


 பாடசாலை முடிந்து திரும்பும் குழந்தைகளை பாடசாலையின் வாயிலில் நின்று எதிர்கொண்டு எல்லோருக்கும் பணிஸ், இனிப்பு என்று தினமும் கொடுப்பார்கள். விழிகள் கலங்க மகிழ்வார்கள். இதனால் நிகழ்ந்ததெல்லாம் ராசதுரையப்புவுக்கென இருந்த பென்னாம்பெரிய தென்னங்காணி, அதற்குள் அமைந்த பெரிய கல்வீடு என எல்லாம் இழந்ததுதான். பின் கொஞ்சக் காசுக்கு வாங்கிய ஒரு சிறு துண்டு கலட்டுக்காணிக்குள் குடிலமைத்து தமது மீதிச் சீவியத்தை நகர்த்தி வந்தனர். அன்னபூரணம் ஆச்சியின் இறுதி மூச்சும் இந்தக் குடிலுக்குள்தான் காற்றில் பரவியது.

காலை ஐந்து மணிக்கெல்லாம் ராசதுரையப்பு தனது வேலைத்தளத்தில் பிரசன்னமாகிவிடுவார். மண்கும்பான், மணல் வெட்டும் தளம். மண் முதலாளியொருவரிடம் ராசதுரையப்பு கணக்காளர். எத்தனை லோட் ஏற்றப்படுகிறதென்பதை சுட்டிக் கல்லிலெண்ணிக் கணக்கிட்டு முதலாளியிடம் ஒப்புவிப்பது. அவருக்குக் கிடைக்கும் தினக்கூலி ஐந்து, பத்தில் அவரது காலம் ஓடிக்கொண்டிருந்தது.

ராசதுரையப்பு இப்போ தனியன். மூன்று வருடங்களின் முன் மனைவி அன்னபூரணம் இறந்துபோனபின் அவருக்குத் துணையாயிருந்தது வீரன் மட்டும்தான். அன்னபூரணம் ஆச்சி சாவதற்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் பால்குடி மறவாத குட்டியாய் சிப்பியெடுத்த கிடங்கிலிருந்து வீரனை மீட்டெடுத்து வந்து தங்கள் பிள்ளைக் கலியைத் தீர்த்துக் கொண்டார்கள். இப்போ அவனும் செத்துப்போனான். செத்துப்போனான் என்பதைவிட சாகடிக்கப்பட்டான் எனாலாம். வயிற்றிலொன்று, கழுத்திலொன்றாக இரண்டு சூடு. யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள் என்பதெல்லாம் சுட்டவர்களுக்கு மட்டுமல்ல, அந்த சுற்றாடல் பூராகவே தெரியும். ஆனாலும் ''புண்ணியத்தில புழுத்துப்போன'' மண்ணின் பெயரால் யாருக்குமே தெரியாதாம் வீரனை யார் சுட்டார்களென்று.

ராசதுரையப்புவின் குடிலைத்தாண்டி நாலு எட்டு வைத்தால் காப்பலேந்தி மாதா கோயில். சொல்லிக் கொள்ளுகிற மாதிரி எந்த வருமானமுமில்லாத மாதாங்கோயில் அது. மாதாவின் முன்றலில்  இருக்கும் மர உண்டியலை ஐந்து சதம், பத்துச் சதம் அல்லது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்தைந்து சதம் , ஐம்பது சதம் யாராவது கிழடுக்கட்டைகளின் முந்தானையிலிருந்து அவிழ்ந்து நனைக்கும். வருமானமில்லாத கோயிலுகளைக் கட்டியழவும் , மாரடிக்கவும் சுவாமிமாரும் தயாரில்லைத்தான். தினப் பூசையையோ வாரப் பூசையையோ மாதாந்தப் பூசையையோ சீவியத்தில கண்டிராத ஒரு சின்னஞ்சிறிய மாதாங்கோயில்.

முந்தியொருக்கால் புயலடித்தபோது புதுமை செய்ததனால்தான் இந்த மாதாங்கோயில் புயலில் தப்பிய ஒரு புண்ணியவானால் கட்டியெழுப்பப்பட்டதாம் என்று மக்கள் சொல்லிக் கொள்வார்கள். அந்த ஒரு புதுமையுடனேயே கப்பலேந்தி மாதாவின் ''பவர் முடிஞ்சுபோச்சுது போல'' என சனம் எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் கொழும்பு லொறிக்காரச் சிலுவைக்கு மாதா புதுமை செய்துபோட்டா. கொழுக்புக்கு கருவாட்டுச் சிப்பங்களை ஏறிக்கொண்டுபோன சிலுவையின் லொறியை வழியில் கத்தி, பொல்லுகளோட ரவுடியள் மறிச்சங்களாம். ''கப்பலேந்தி மாதாவே காப்பாத்து'' என சிலுவை மனதுக்குள் மன்றாடிக் கொண்டாராம். மறிச்ச ரவுடியள் காசுப்பையை மட்டும் பறித்துக்கொண்டு சிலுவையையும் ட்றைவரையும் உயிருடன் விட்டாங்களாம். கப்பலேந்தி மாதாதான் தன்னைக் காப்பாற்றினார் என்று முற்றுமுழுதாய் நம்பிக்கொண்ட சிலுவை குடும்பத்தோடு கோயிலுக்கு வந்து பத்துப்பவுண் சங்கிலியை மாதாவுக்குப் போட்டார். வீரன் சாகடிக்கப்பட்டதற்கு இந்தப் பத்துப்பவுண் சங்கிலியே காரணமாகிவிட்டது. மாதாவின் கழுத்தில் பத்துப்பவுண் சங்கிலி கிடப்பதைக் கேள்விப்பட்ட ''ஏரியாப் பொறுப்பாளர்'' இரவோடிரவாய் தனது சகாக்களுடன் சென்று சங்கிலியை எடுத்துக் கொண்டு வரும்போது வீரன் சத்தம் போட்டிருக்கிறது. அந்தச் சத்தமே அதன் இறுதிச் சத்தமாயும் போய்விட்டது.

ராசதுரையப்புவுக்கு வீரன்தான் எல்லாம். எந்த நேரமும் வீரனோடு ஓயாமல் கதைத்துக் கொண்டேயிருப்பார். வீரனும் அவரது எல்லாக் கதைகளையும் செவிகளை ஆட்டி ஆட்டி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டேயிருக்கும். யோசிக்கும், அனுதாபமாய் ஊளையிடும், கோபமாய்க் குரைக்கும், நேசமாய் அனுங்கும். ராசதுரையப்புவின் மடிக்குள் தலையைப் புதைத்து ஆதார ஒத்தடம் கொடுக்கும், சமயங்களில் அழும், அழத்தெரிந்தது போலவே ராசதுரையப்புவின் ''முசுபாத்திக்'' கதைகளைக் கேட்டு அது சிரிக்கவும் செய்தது. விழுந்து விழுந்து சிரிக்கும், புழுதியில் புரண்டு புரண்டு சிரிக்கும், இங்குமங்குமாய் ஓடியோடிச் சிரிக்கும். இப்போது அதன் சிரிப்பும், கோபமும், அழுகையும் மட்டும்ல்ல உயிரும் அடங்கித்தான்போனது. ராசதுரையப்புவுக்கு சொற்களிலளவிடமுடியாத துயரம். மனைவி மட்டுமல்ல மகன் வீரனையும் இழந்த துயரல்லவா?

ஊராரின் ''மெல்லப்போசு'' முறைமைகளிலிருந்து ராசதுரையப்புவிக்கு சாடைமாடையாகத் தெரியும் வீரனை யார் சுட்டார்களென்று. அதுதான் ராசதுரையப்புவுக்கு இன்னும் கவலை. ராஜ், அந்த ஏரியாப் பொறுப்பாளர். பாடசாலை முடிந்ததும் ராசதுரையப்புவின் பணிஸ் வாங்கவென்றே முண்டியடித்து எல்லோருக்கும் முன்னாய் ஓடி, தனக்கும் தன் தாய்க்குமாய் ராசதுரையப்புவிடம் அல்லது அன்னபூரணம் ஆச்சியிடம் பணிஸ் பெற்றுக்கொண்ட அந்தோனிதாசன் என்ற அந்த சிறுவன், இன்று ராஜ். ஏரியாப் பொறுப்பாளர். அந்தோனிதாசன் கைக்குழந்தயாய் இருந்தபோதே அவனையும் தாயையும் விட்டு ஓடியவன்தான் தந்தை. இன்றுவரை திரும்பவேயில்லை. சிப்பி லொறிக்காரனிடம் சிப்பிக்கிடங்கின் மறைவில் அந்தோனிதாசனை ''வயித்தில வாங்கிப்போட்டாள்'' என்பதுதான் அவனது குற்றச்சாட்டு. கொழும்பில் அவன் வேறொரு கலியாணம் செய்து குடும்பமாயிருக்கிறான் என்று கேள்வி. கணவன் ஓடிய பின் அந்தோனிதாசனை வளர்த்து ஆளாக்க அவன் தாய் மரியம்மா பட்ட பிரயத்தனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பாவத்துக்கிரங்கி ராசதுரையப்பு  முன்பு கொடுத்த பத்துத் தென்னைகளடங்கிய ஒரு சிறுதுண்டு காணிக்குள் மகன் அந்தோனிதாசனோடு வாழ்வை நகர்த்தி வந்தாள். இப்போ அந்தோனிதாசன் அந்த ஏரியவுக்கே பெரியாள். இப்போது அவன் அந்தோனிதாசனல்ல. ராஜ்.

தினமும் தான் ஆசையாசையாய் முத்தமிட்டு வளர்த்த அந்தோனிதாசன் கம்பீரமாய், வீரனாய ஊருக்குள் பெரிய பெயரோடு இருக்கிறான் என்பதை எண்ணும் போது ராசதுரையப்புவுக்கு சரியான சந்தோஷந்தான் . அதேபோல் தன் மகன் வீரனை அந்தோனிதாசன் கொன்றான் என்பதை எண்ணும் போது அப்புவுக்கு சோகத்தின்மேல் சோகம், கோபத்தின்மேல் கோபம். ராசதுரையப்பு வேலைத்தளத்திற்கு வந்து விட்டார். மண் வெட்டும் வேலையாட்கள் பனை வடலிகளின் மெலிந்த நிழல்களுக்குள் தம்மை இருத்தி வைத்திருந்தனர். ட்ராக்டர்களும் அப்படி அப்படியே நின்றன. ''தாங்க வருமட்டும் மண்ணெடுக்க வேணாமெண்டு ஓடர்'' கூட்டத்திலொருவன் சொன்னான்.
''ஏனாம்?" ராசதுரையப்பு கேட்டார்.

''ஏதோ வரிக்கணக்குப் பிழையாம்!" இன்னொருவன் சொன்னான்.
ராசதுரையப்புவுக்கு ஓரளவு விளங்கி விட்டது. மண்முதலாளி குறைந்த லோட் கணக்குக் காட்டி பொடியளுக்குக் கொடுக்க வேண்டிய வரியில் விழுங்கிவிட்டான். '' பொடியளென்ன லேசுப்பட்டவங்களே? மணந்து மணந்து களவப் புடிச்சுப்போடுவாங்கள். மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து வீதியோரப் பனையடியில் நின்றது. இரு இளைஞர் இறங்கி வந்தனர்.
''ஆர்ரா இங்க கணக்குப்புள்ள?'' கம்பீரமாய் இறங்கிவந்த அந்த இளைஞன் அதிகாரமான குரலில் கேட்டான். பனைமர நிழலில் நின்ற ராசதிரையப்பு ''நான் தான் ஏன் ராசா?" என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார். அப்புவின் முன்றலில் வந்து தரித்தான் ராஜ் என்ற அந்தோனிதாசன். தனது தென்னங்காணிக்குள் பச்சைப் பிஞ்சாய் தாயோடு தஞ்சமடைந்த அந்தக் குருத்து. இப்போ நெடுநெடென்று நெடுத்து, நிகிர்ந்து, வீரனை விழுங்கிய வீரனாய்.

''நீதானா கணக்குப்புள்ள?'' அப்புவை அதட்டலாய்க்  கேட்டான்.
''ஓம் ராசா. என்ன நடந்தது.....'' அவனது கேள்வியில் பொதிந்திருக்கும் மர்மம் அறியாதவராய் அப்பு கேட்டார்.
''எங்களுக்கே கள்ளக்கணக்கா.....? கேட்டபடியே அவனது வலக்கரம் அவனது இடப்பக்க இடுப்பை தேடிச்சென்று அதை உருவியது.
வெடித்தது!
வெடித்தது!!
வெடித்தது!!!
மூன்று சத்தம்.
மூன்று தோட்டா.
மூன்று பொட்டு.
ராசதுரை அப்புவின் இரத்தத்தை மண் குடித்தது.
மண்கணக்கு சரிசெய்யப்பட்ட திருப்தியோடு மோட்டார்சைக்கிள் சிரித்துக் கொண்டு பறந்தது.

நன்றி: கண்ணில் தெரியுது வானம்

தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும்

-தமயந்தி- (சிறுகதை, 2009. feb) 



எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டடோம்.
என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்தி வந்தோம் ஆயினும் இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளி விட்டீர்.
இழிவு படுத்தி விட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.
எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர்.
எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர்.
உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல் எங்களை ஆக்கி விட்டீர். வேற்றினத்தாரிடையே எங்களைச் சிதறியோடச் செய்தீர்.
நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்று விட்டீர்.
அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்து விட்டீர்.
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்.

மூன்று சனி

-தமயந்தி-  சிறுகதை/ 1993



நாளை சனிக்கிழமை. தாய்மொழிக் கல்வி புகட்டும் தமிழ்ச்சிறுவர் பாடசாலை. சென்ற கிழமை மகனின் ஆசிரியை ஆளுக்கொவ்வொரு சிறுவர் பாடலை வீட்டில் பெற்றோரிடம் கேட்டுப் பாடமாக்கி வரும்படி கட்டளையிட்டுள்ளார். கார்த்திகாவுக்கு நேரமில்லை. புகுந்த நாட்டு மொழியைப் பொறி பறக்கக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் அவள். அத்தோடு பகுதி நேர வேலையாக ஒரு சிறுவர் பூங்காவை சுத்திகரிக்கும் சிலமணிநேர வேலை. இரண்டுமே செய்தாகத்தான் வேண்டும். இந்த இரண்டில் எந்தவொன்றையும் அவளால் தியாகம் செய்ய முடியாது. இந்த நாட்டில் வாழ்வதென்பது மொழியறிவற்று முடியாத காரியம். அதனால் மொழி கற்றுக்கொள்வதை இடையில் நிறுத்தவோ குறைக்கவோ முடியாது.


வேர் கொண்டெழும் பாறை

-தமயந்தி-  சிறுகதை (1994)

(நன்றி: தோற்றுத்தான் போவோமா)

 


பணிகளோ ஏராளம்
கணங்களோ
கைச் சிறங்கையளவு.

செலவு செய்யப்படாத
இளமையோடும் கனவுகளோடும்
இருளிடையே கரைந்துபோன
எனது
பல தோழர்களைப்போல
ஒரு நாள்
இருளின் வயிற்றினுள்
நானும் மறைந்து போவேன்.

அதற்கு முன்…?...!

சூரியனையும் காற்றையும்
முந்திக்கொண்டு
தரிக்காமல் ஓடவேண்டியிருக்கிறது.
ஓடுகிறேன். 




பாத்திரங்கள்:
ஒரு கிராமம்
ஒரு புனிதர்
ஒரு மனிதன்
ஒரு படைவீரன்
ஒரு தோணி
ஒரு அகதிமுகாம்
ஒரு சவப்பெட்டி
ஒரு பாறை