வெள்ளி, 5 ஜூலை, 2019

பொருந்தாச் சட்டமும், சீரழியும் கடற்புறமும்

கஞ்சாக் கடத்தல்காரருக்கே கடற்கரைகள்,
மீனவர்களுக்கு அல்ல.
"சட்டப்படி"


//இந்தப் படத்துக்கான சிறு குறிப்பை எழுதப்போனால் பக்கம் பக்கமாகப் போகிறது.
முகநூலில் அப்படி எழுதி நண்பர்களின் பொறுமையை அடிக்கடி சோதிப்பது நல்லாப் படேல்ல.//
என்ற குறிப்போடு முகநூலில் பதிவிட்ட படத்துக்கான சற்று விரிவான குறிப்பு.

--------------------------
முன்னைய காலங்களில் கடற்கரைகளும், கரைகளும் மிகவும் சுதந்திரமாக இருந்தன.
மாசற்ற காற்றை சோளகம், வாடை கொண்டல், கச்சான் என பருவ காலங்கள் தவறாமல் அள்ளி வீசிக் கொண்டிருந்தன. 
கடலின் பொருட்டும், கரைகளின் பொருட்டும் மீனவர்களும் கட்டற்ற சுதந்திரமுடையவர்களாகவும், கர்வம் கொண்டவர்களாகவும், கடலுக்கும், கரைகளுக்கும் பாதுகாவலர்களாகவும் இருந்தார்கள். கடலும் கரையும்தான் மீனவர்களின் வீடாகவும் இருந்தன.
குடும்பத்தோடு தாம் வாழும் குடிசையை வேறாக, கடற்கரைகளை வேறாகப் பார்த்தறியாத கூட்டம்தான் பாரம்பரிய மீனவ மக்கள்.