-அம்ரிதா ஏயெம்-
1) சிலர் மூன்றாம் நிலை அனுபவங்களை அதாவது ஒருவர் இன்னொருவருக்கும், அவர் அதை இன்னொருவருக்கு கூறியவற்றை, அனுபவித்தவற்றை பதிவு செய்வார்கள். அல்லது இரண்டாம் நிலை அனுபவங்களை தங்களுக்கு இன்னொருவர் கூறிய, அனுபவித்தவைகளை பதிவு செய்வார்கள். அடுத்தது முதலாம்நிலை அனுபவங்கள், தாங்கள் நேரடியாக ஈடுபட்ட, கண்டுகளித்த, உணர்ந்த விடயங்களை பதிவு செய்வார்கள். இந்தக் கடைசி நிலைதான் உணர்வுபூர்வமானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும். தமயந்தியின் ஏழு கடற்கன்னிகளும் முதலாம் நிலை அனுபவங்கள்போல்தான் தெரிகிறது.
2) தமயந்தியின் ஏழு கடல்கன்னிகளை வாசிக்கத் தொடங்கியபோது அது எனது இதயத்திற்கு அணித்தாக இருந்தததை உணர்ந்தேன். அத்துடன் அது எனக்கு மிகுந்த வாசக ஈர்ப்புள்ளதாய் இருந்ததாயும், கவிதைக்கும், உரைநடைக்கும் இடையில் ஒரு மொழி ஊடாடுவதாயும், உணர்ந்தேன்.
3) நான் இரு வெவ்வேறு பல்லைக்கழகங்களில் விசேட கற்கை மாணவர்களுக்கு ஒன்றில் கடல்சார் உயிரியல் (Marine Biology), இன்னொன்றில் கடல்சார் உயிர்வளங்களின் முகாமைத்துவம் (Marine Bioresource Management) என்ற இரு பாடங்களைக் கற்பித்துக் கொடுத்துக் கொண்டும் இதற்கு மெனக்கெட்டுக் கொண்டும் இருந்த காலையில், ஏழு கடல்கன்னிகள் எனது கைக்கு கிடைத்தபோது, நான் கற்பித்துக் கொடுக்கும் இரு பாடங்களின் பிரதிகள் - முற்று முழுதாக தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள் பிரதிதான் என்றும் உணர்ந்து கொண்டேன். அதன் காரணமாக அதற்குள் பொதிந்திருந்த உள்ளடக்கம், மொழி என்பவற்றின் காரணமாகவும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
4) 112 பக்கங்களைக் கொண்ட (105 பக்கத்தில்) ஆறு சிறிய கன்னிகளையும், ஒரு பெரிய கன்னியையும் கொண்ட ஒரு நேர்கோடற்ற நாவல் என்று சொல்லக்கூடியதுதான் தமயந்தியின் ஏழு கடற்கன்னிகள் சிறுகதைத் தொகுதி.
5) முதலாவது "கிற்றார் பாடகன்" கன்னி:
தொய்ந்து போயிருக்கும் கம்பிகளைக் கொண்ட கிற்றாரை மீட்டி இசைக்கும், கிழவனினதும், வாழ்நாளெல்லாம் தன் ஆச்சியை கஸ்டப்படுத்தி நண்டுச் சம்பல் பாடகனான தனது அப்புவினதும் அனுபவங்கள் பற்றிய கதை. கிற்றார் இசைக்கும் கிழவனினதும், கதை சொல்லிக்குமான உறவு, மனிதநேய அவலச் சுவை கொண்டதாக காணப்படுகின்றது. புலம்பெயர்வில் வந்தேறிகள் அனுபவிக்கும் பிரச்சினைகளையும் பேசுகிறது.
6) இரண்டாவது "ஏழாற்றுக் கன்னிகள்":
கடல் என்பது கடலாருக்கு ஒரு ஊர் போன்றது. அங்கே வீதிகள் இருக்கும். குறுக்குச் சந்துக்கள் இருக்கும். அவைகளுக்கு பெயர்களும் இருக்கும். வளமில்லா பாழ்வளவுகள் இருக்கும். வளம் கொண்ட நிலங்கள் இருக்கும். பள்ளம் இருக்கும், மேடுகள் இருக்கும். நஞ்சு நிலமும் இருக்கும், நல்ல நல்ல நிலமும் இருக்கும். அவர்கள் கடலை நிலம் போன்று சிறுசிறு பிரிவுகளாக பிரித்து அவற்றுக்கு பெயர்களும் வைத்து சிலவேளை பாத்தியதை கொண்டாடி அவைகளைப் பாவிப்பார்கள். எங்கே பார்த்தாலும் நீலம் விரவிக் கிடக்கும் என்று எண்ணுகின்ற எமக்கோ இவைகள் மலைப்பாக இருக்கும்.
இங்கே துல்லியமான கடற்புவியமைப்பு சொல்லப்படுகின்றது. தங்கிச் செல்லல் மீன்பிடி விளக்கப்படுகிறது மீன்பிடிக்கான கடல்வளங்கள் அந்நிய நாட்டவர்களால் மனிதாபிமானமின்றி, கருணையின்றி சிதைக்கப்படுவதை ஒவ்வொரு கடல்கன்னிகளின் சிதைவையும் வைத்து அற்புதமாக கதை கொண்டு செல்லப்படுகின்றது.
இந்த ஏழு கடற்கன்னிகளையும் சிதைத்தது, பின்வரும் ஏழு அரக்கர்களாகத்தான் இருக்க வேண்டும்.
1) இழுவை படகும் இழுவை வலையும் (Trawling and trawler),
2) அடித்தளவலை (Bottom set net),
3) அதீத அறுவடை (Over exploitation),
4) சிறியகண் வலைகள் பாவித்தல் (Nonselective gears),
5) மொக்சி வலை
6) வெடிவைத்தலும் நச்சாக்கலும் (Blasting and poisoning),
7) கட்டுப்பாடற்ற, அதீததமான கடல் உயிரிகளை பிடித்தல்.
7) மூன்றாவது "நாச்சிக்குடா எழுபத்தேழு" கன்னி:
அந்தக் காலத்தில் இரத்தமும், சதையுமாக இனங்களுக்கிடையே இருந்த சகவாழ்வு, ஒற்றுமை போன்றவற்றையும் பேசி, உழைப்பு சுரண்டல்கள் போன்றவற்றையும் பேசுகின்றன. மீன்வளங்கள் குறைந்து, மீன்பிடி குறைந்ததற்கான காரணங்களும் சொல்லப்படுகின்றன. ஒரு வகையில் மாணவர்களுக்கு மீன்வளமும், மீன்பிடியும் சம்பந்தமாக கற்பித்துக் கொடுக்கக்கூடிய எளிமையான பிரதியோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இது கட்டாயம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பது திண்ணமான எண்ணமாகும்.
8) நாலாவது "அப்பு"க் கன்னி:
சொந்தங்களுடனும், உறுவுகளுடனுமான வாழ்வின் சிக்கல்களும், தீவு வாழ்வியலின் மாற்றமுடியாத சாதியக் கட்டடைமைப்புகளும் பற்றி பேசுகின்றது. இறந்து போன அப்புவை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்து, இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒப்பீடு செய்கிறார். அதில் கதை சொல்லி வாழும் நிகழ்காலத்தின் போதாமைகள் தெரிகின்றன.
9) ஐந்தாவது கன்னி "தொள்ளாயிரம் சரிகளும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும்":
மாஸ்டர்மார் ஒன்றரைக் கட்டைகளுக்கு அப்பாலுள்ள வெள்ளாள வீட்டில்தான் தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வரவேண்டும் என்று மாணவர்களை பணிப்பதும், கொடுமையென்றால், அதை மாணவர்கள் எடுத்து வரும்போது, அதில் கொஞ்சத்தை குடித்து அதற்குள் எச்சில் துப்பி, மழை நீரை நிறைத்து வருவது அடிவாவடி குசும்பாக இருக்கிறது.
யுத்த இடப்பெயர்வு, இயக்கங்களின் பம்மாத்து, அதனை வைத்து நடாத்தும் அரசியல், இடப்பயெர்வின் கொடுமைகள் போன்றவை மனதை நெருக்குகின்றன.
10) ஆறாவது "மண்டா" கன்னி:
கோயில் திருவிழா, அப்போது இனங்களுக்கடையே நிலவிய இனசௌஜன்யம், சாதி அரசியல், மத ஸ்தாபன சுரண்டல்கள், இயக்கங்கள் செய்த அடிவடிகள், போரின் அவலங்கள், தாசன் மாமாவின் கதை போன்றனவற்றை பதிவுசெய்துகொண்டு இந்தக் கன்னி நகருகிறாள்.
11) ஏழாவது "எட்டாம் பிரசங்கம்" கன்னி:
பெரிய கன்னி: மீண்டும் கற்பனைக்கும். நிஜத்திற்கும் இடையில் தனது இறந்து போன அப்புவையும், பவுல் புரூனோவையும் அழைத்து உரையாடல்கள் நடாத்தி நிகழ்காலத்திற்கும், இறந்த காலத்திற்குமான மாறிப் போயிருந்தவைகள், மாறிக்கொண்டிருப்பவைகள் பற்றி ஒரு தத்துவ விசாரனை செய்கிறாள். கலவாய் மீன் வேட்டை மிகுந்த திறத்துடனும், அதன் வேட்டைக் கருவி மிகுந்த நுட்பத்துடனும் இங்கு தொய்வின்றி விளக்கப்படுகின்றன.
ஆண்டாண்டு காலமாக தாங்கள் வாழ்ந்து வந்த தங்கள் சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான பச்சாதாபம், முஸ்லிம் மக்களின் வெளியேற்றம், முபாரக் அலி நாநாவின் கதை, விநாயகமூர்த்தியரின் கதை போன்றவற்றையும், நன்னீர் உவர்நீராதல் போன்ற சுற்றுச்கூழல் பிரச்சினையும் பதிவு செய்து கொண்டு போகிறாள் இந்தக் கன்னி.
12) மொத்தத்திலே பார்க்கப் போனால் நான் ஏற்கனவே கூறியது போன்று ஏழு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு நாவல் போன்றுதான் தெரிகிறது இது. ஏனெனில் அத்தியாயங்களுக்கிடையே தருக்க ரீதியான தொடர்புகளும் பாத்திரங்களுக்கிடையேயான பனுவலிடைத் தொடர்புகளும் அவதானிக்கப்படுகின்றன.
13) இந்த “நாவலில்” என்னை மிகவும் கவர்ந்த முக்கிய விடயம், இந்தக் கன்னிகள் பயன்படுத்தியிருக்கும், கொப்பர்பெட்டி, பூண்டிக்கற்செடி, சிறுமுருகைக் கொத்தைகள், பிடிபாடு, படுப்புவலை, ஊமல்கள், வார்கசை, தங்கு தாணையம், சக்கிடுத்தார், களங்கண்டி, கடையாற் குட்டை, குறண்டியபடி, வளர்பிறை வெள்ளம், வெங்கணாத்தி, கும்பா, கச இருட்டு, ரெத்த உருத்துகள் போன்ற நூற்றுக் கணக்கான மண்மணக்கும் அங்காங்கே பரவிக் காணப்படுகின்ற சொற்களைக் குறிப்பிடலாம்.
14) மொத்தத்தில் மீன் இனங்களின் வகை (Species composistion), மீன்பிடி முறைகள் (fishing), மீன்பிடிக் கலகங்கள் (fishing craft), கடற் சுற்றுச்சூழல் (Marine environemtn), நீரோட்டம் (Current), கடல் மாசடைதல் (Marine Pollution), கடல்சார் உயிர் வளங்களின் முகாமைத்துவம் (Marine Bioresource Management) மற்றும் கடலார் சமூக, பொருளாதார, தத்துவ, கலை, இலக்கிய, மொழி போன்ற விடயங்களை ஏழு கடல்கன்னிகள் பொதிந்து வைத்திருந்ததற்காகவும், ஏழு கடல்கன்னிகள் மிகவும் ஆழமாக ஆய்வு செய்யப்படவேண்டும், அது மொழிமாற்றம் செய்யப்பட்டு யாமறிந்த இன்பத்தை மற்றையோரும் அறிய வேண்டும் என்று கேட்டு, ஒரு நேர்கோடற்ற நாவல்தான் ஏழு கடற்கன்னிகள் என்பது எனது தனிப்பட்ட கருத்தென்றால் அது மிகையல்ல என்று கூறி எனது விமர்சனத்தை முடிக்கிறேன்.
23.09.2016 இன்றைய கதவு திறந்துள்ளது - புத்தக அறிமுகமும் உரையாடலும் என்னால் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது. சில வேலைப் பணிகள் காரணமாக. என்றாலும் தமயந்தியின் ஏழு கன்னிகள் மீதான எனது இந்த உரையை வேறு ஒருவர் (இமாம் அத்னான்) படிப்பார் என்று நினைக்கிறேன். இந்த வாய்ப்பi ஏற்படுத்தித் தந்த றியாஸ் குரானாவிற்கு நன்றிகள்.
நன்றி
வஸ்ஸலாம்
வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக